04 – மீண்டும் வாழ்த்துகிறேன்!

மீண்டும் வாழ்த்துகிறேன்!

 

இதுவரை

நீ பெற்ற சித்திகளுக்கும்

இனிமேல்

பெறவிருக்கும் சித்திகளுக்கும்

என் வாழ்த்துக்கள்!

கடலில் மூழ்கியவன்

முத்தெடுக்காமல் வரலாம்!

ஆனால்..

பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்தவன்

கைநிறைய சித்திகளோடு தான்

வரவேண்டும்!

உன்னைப்போல….!

மீண்டும்… மீண்டும்…

வாழ்த்துகிறேன்!

வகுப்பறையில்

உன்வேர்களை

எவ்வளவு ஆழத்திற்கு

இறக்குகின்றாயோ

வாழ்க்கையில்

அவ்வளவு உயரத்திற்கு

உன்கிளைகள் உயரும்!

உன் விலாசத்தை

நீயே பொறித்துகொள்ளும் போதுதான்

உன் விசாலத்தை

இந்த உலகம் அறிந்து கொள்ளும்!

பள்ளிப் படிப்பில் மட்டுமல்ல

வாழ்க்கையிலும்

எல்லா சிகரங்களையும்

நீ தொடவேண்டும்!

இன்று நீ

பெறுகின்ற சித்திகள்தான்

நாளை நீ

சூடப்போகும்

மகுடத்தின் மாணிக்கங்கள்!

உனக்காகவும்

உன் ஒவ்வொரு சித்திக்காகவும்

தவமிருக்கும்

தயார் பாதம் பணி!

நீ ஒளி பெறவேண்டும்

என்பதற்காக

திரியாக எரிந்த சூரியதீபங்களை

ஆராதனை செய்!

உன் வாழ்க்கைப் பாதையில்

பூக்கள் சொரிவோர்க்கு

நன்றி சொல்! கரங்கள்கூப்பு!!

முட்கள் புதைப்போரை

நினைவில் வை! காலம்வரும்!!

எல்லா தெய்வங்களும்

உன்னை ஆசீர்வதிக்கட்டும்!

இன்னும்… இன்னும்…

ஆயிரம்… ஆயிரம்…

சித்தி தேவதைகள்

உன் வசமாகட்டும்!

உன் உயரம் பார்த்து!

உன் வேர்களின் ஆழம்பார்த்து!

என் பேனா என்றென்றும்

வாழ்த்துரைக்கட்டும்!

அன்புடன் வாழ்த்துவது…

அம்மா அப்பா சகோதரங்கள்

மற்றும் உறவுகள்!

நீர் ஒளிபெற வேண்டும்

என்பதற்காக

திரியாக எரிந்த ஆசான்கள்!!

31-08-1999

Leave a comment